24 பிப்ரவரி, 2009


ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ.ஆர்.ரகுமான்! -கோவி.லெனின்
இந்தியர்கள் அவ்வளவு சட்டெனப் பெருமைப்பட்டுவிட முடியாது. ஆயிரம் பவுர்ணமிகள் கடக்கும் வரை காத்திருந்தே ஆஸ்கர் விருதின் வெற்றிக் களிப்பை நாம் அனுபவிக்க முடிந்துள்ளது. இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கர் விருதினைப் பிடித்தபடி, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் கொடாக் ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சொன்னதில் எல்லோருக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெருமைக்காக இந்தியத் திரையுலகம் ஆயிரம் பவுர்ணமிகள் காத்திருக்க வேண்டியிருந்ததையும் மறந்துவிடமுடியாது.
80 வயது நிறைவடைந்து 81வது வயதில் அடியெடுத்து வைப்பவர்களை “ஆயிரம் பிறை கண்டவர்” என்கிறது தமிழ் மரபு. ஆயிரம் பிறைகளைக் கண்டிருப்பார் என்றால், ஆயிரம் பவுர்ணமிகளையும் அவர் கடந்திருப்பார் என்றுதானே அர்த்தம்! 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில்தான் இந்தியர்கள் இந்த சாதனையை எட்டிப்பிடிக்க முடிந்திருக்கிறது எனும்போது கடந்த 80 விழாக்களில் நாம் புறக்கணிக்கப்பட்டு வந்ததையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. ஆயிரம் பவுணர்மிகளை கடக்க வேண்டுமென்றால், ஆயிரம் அமாவாசைகளையும் கடந்துதானே வரவேண்டும்! அத்தனை அமாவாசை இருட்டையும் ஒருசேர விரட்டிவிட்டது ஏ.ஆர்.ரகுமானின் கையில் ஒரே நேரத்தில் ஜொலித்த இரண்டு ஆஸ்கர் பவுர்ணமிகள்.
வெற்றிச் சிகரத்தில் ஏறிவிட்ட ஒருவரை வாழ்த்துவது நல்ல மரபு என்றாலும் அது “கூட்டத்தோடு கோவிந்தா” கதையாக இருந்துவிடக்கூடாது. ஏ.ஆர்.ரகுமானின் மகுடத்தில் மின்னும் புதிய இரண்டு வைரங்கள் எப்படி வந்தன என ஆழத் தோண்டினால் அதில் இந்திய சினிமா இசையின் வரலாறு வெளிப்படும். ரகுமானின் கையில் மின்னும் இரண்டு பவுர்ணமிகளுக்குள் ஆயிரம் பவுர்ணமிகளின் வெளிச்சம் புதைந்திருக்கும் உண்மையையும் அறிந்து கொள்ள முடியும். வடக்கே நவ்ஷாத், எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த்-பியாரேலால், கல்யாண்ஜி-ஆனந்த்ஜி தெற்கே ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய திரையிசைப் படிக்கட்டு வழியாகத்தான் ஏ.ஆர்.ரகுமான் இன்றைய உயரத்திற்குச் சென்றிருக்கிறார் என்று சொன்னால் அதை ரகுமானே மறுக்க மாட்டார்.
படம் பார்க்கின்ற ஒவ்வொரு ரசிகனின் நெஞ்சத்துக்குள்ளும் ஊடுருவி காலகாலத்திற்கும் இன்ப இம்சைக்குள்ளாக்கும் சக்தி திரைப்பாடல்களுக்கு உண்டு. மேலே குறிப்பிட்ட இசை ஜாம்பவான்களின் பல பாடல்கள் இன்றும் பல கோடி இந்தியர்களின் உயிர்த்துடிப்போடு கலந்திருக்கிறது. கடல் கடந்த நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் இந்தியத் திரை இசைப்பாடல்கள் விட்டுவைப்பதில்லை. இந்துஸ்தானி, கர்நாடிக், வடஇந்திய-தென்னிந்திய நாட்டுப்புற இசை இவற்றை அனைத்துத் தரப்பினருக்கும் பொதுமைப்படுத்தியதிலும், வெளிநாட்டு இசையையும் வெளிநாட்டு இசைக்கருவிகளையும் நமது மக்களுக்கேற்ற வகையில் பிரபலப்படுத்தியதிலும் திரை இசைக்கே முதன்மையான இடம் உண்டு.
மச்சானப் பார்த்தீங்களா என “ஒத்தை அடி”யின் பின்னணியில் இளையராஜா தந்த கிராமிய இசையாகட்டும், என் இனிய பொன்நிலாவே என்று மேற்கத்திய பாணியை கலந்து வழங்கிய பாடலாகட்டும், ரசிகர்களின் இதயத்தில் நிரந்தர சிம்மாசனமிட்டிருக்கின்றன. இத்தகைய ஜாம்பவான்களின் வரிசையில் தனது முதல் தமிழ் படத்தின் வாயிலாக இந்திய ரசிகர்களையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் ஏ.ஆர்.ரகுமான்.
இந்திய திரை இசை மரபின் நுணுக்கங்களை உள்வாங்கிக்கொண்டு அதனை உலகத் தரத்திற்கு உயர்த்தியதே ரகுமானின் இன்றைய சாதனைகளுக்கு அடித்தளமாகும். புதிய புதிய தொழில்நுட்பங்களும் விரிவான வியாபாரத்தளமும் மரபார்ந்த இசையை சிதைத்துவிடும் என்றே பெரும்பாலான இசையமைப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தார்கள். இளம் கன்று பயமறியாது என்பதுபோல புதிய பாய்ச்சலுடன் தனது முதல் படத்திலிருந்து இன்றுவரை தொழில்நுட்பத்தையும் வியாபாரத்தளத்தையும் சரியாகக் கையாண்டு வெற்றிச் சிகரங்களில் ஏறிக்கொண்டே இருக்கிறார் ரகுமான்.
ரோஜா படத்தின் முதல் பாடலான சின்னச் சின்ன ஆசையின் தொடக்கத்தில் வரும் இசையும் அதன் தொழிநுட்பமும் இந்திய திரையிசை ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. இவர் திறமையானவர், வித்தியாசமானவர், மாயாஜாலக்காரர் என ரசிகர்கள் அந்த முதல் பாடலிலேயே தங்கள் இதயத்தை ரகுமானிடம் பறிகொடுத்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை வீணாக்காமல் தனது வித்தியாசமான திறமையையும் தொழில்நுட்ப மாயாஜாலத்தையும் ஒவ்வொரு படத்திலும் ரகுமான் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அவரது இசையின் அடித்தளமாக இருந்தது தமிழ் மண்ணின் நாட்டுப்புற இசையன்று. இந்துஸ்தானி இசையே அவரது திரையிசைக்கு அடிப்படை என்பதையும் கஜல் உள்ளிட்ட இசை வடிவங்களையும் இந்துஸ்தானி இசைக் கருவிகளையும் அவர் சிறந்த முறையில் கையாண்டதையும் அவரது பாடல்களால் ஈர்க்கப்படவர்கள் அறிவார்கள். அதனால், தமிழ்த்திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்த பாடல்களும்கூட மொழிமாற்றம் பெற்று இந்திக்குச் சென்று, நேரடி இந்தி திரைப்படப்பாடல்களை விஞ்சக்கூடிய அளவில் வெற்றி பெற்றன. ரோஜாவிலேயே இந்த வெற்றி தொடங்கிவிட்டது. முதல் படத்திலேயே தேசிய விருது பெறக்கூடிய தகுதிமிக்க வெற்றியாளரானார் ரகுமான்.
உலகமயமாக்கலின் விளைவாக இந்திய இசையின் வணிகத்தளம் விரிவடையத் தொடங்கிய காலகட்டமே ரகுமானின் அறிமுகப்படலம் நடந்த தருணமாகும். ரங்கீலா உள்ளிட்ட நேரடி இந்திப்படங்களுக்கு அவர் இசையமைத்த விதமும், வந்தேமாதரத்திற்கு புதிய இசைவடிவம் கொடுத்து அதனை இந்தியாவின் இரண்டாவது தேசியகீதமாக்கிய திறமையும் அவரது புகழை உயர்த்தின. ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது. இந்தியர்கள் உலகெங்கும் பரவ, இந்திய இசையின் வணிகத்தளம் விரிவடைய, பன்னாட்டு நிறுவனங்கள் ரகுமானை அண்டின. மிகக் கவனமாக அவற்றைக் கையாண்டதுதான் ரகுமானின் பெரும் வெற்றி.
தன்னைத் தேடி பல வாய்ப்புகள் வந்தபோதும் சரியானதாகவும் தனது விருப்பத்திற்குரியதாகவும் இருக்கக்கூடிய இசையமைப்புகளுக்கு மட்டுமே அவர் இசைவளித்தார். திரைப்படங்களாக இருந்தாலும் இசைத் தொகுப்பாக இருந்தாலும் மேடை நிகழ்ச்சியாக இருந்தாலும் ரகுமான் மிகவும் கவனத்துடனேயே தேர்வு செய்தார். ஒப்புக்கொண்டுவிட்டால் அதன் வெற்றிக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது ரகுமானின் இயல்பு. எப்போதும் புதியதாகவும், பழைய பாணியைத் தகர்ப்பதாகவும், ஆழ ஊடுருவக்கூடியதாகவும், பரிசோதனை முயற்சியாகவும் அமைவதே ரகுமானின் இசை என்கிறார்கள் இசைத்துறையினர். ரகுமானோ இது தனக்கு கடவுள் அளித்த வரம் என்பதற்கு மேல் வேறெதுவும் பேசுவதில்லை. ஆனால், அவரது இசை உலகெங்கும் பேசப்படுகிறது.
இந்தியத் திரை இசை மரபின் தொடர்ச்சியான ஏ.ஆர்.ரகுமான், தான் வாழும் காலத்தை மிகச் சரியாக உணர்ந்து, சரியான இசையை வழங்குபவர். அவரது தாக்கம் இல்லாமல் இன்றைய புதிய இசையமைப்பாளர்கள் யாருமில்லை. 4 தேசிய விருதுகள், 12 ஸ்க்ரீன் விருதுகள், 21 ஃபிலிம்ஃபேர் விருதுகள், பத்மஸ்ரீ பட்டம் என இந்தியப் பெருமைகள் பலவற்றைப் பெற்ற ரகுமான், ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்தின் மூலமாக கோல்டன் குளோப், ஃபாப்டா போன்ற உயர்ந்த விருதுகளைப் பெற்று, திரையிசைக்கான எவரெஸ்ட் விருதான ஆஸ்கரையும் பெற்றுவிட்டார்.
அவருடைய திரை இசைப்பயணம் நெடுகிலும் பெரும் முதலாளித்துவ-பன்னாட்டு -உலகமயத்தன்மைகள் தவிர்க்க முடியாதவனவாகிவிட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயக்குநர் டேனி பேர்ல் எடுத்த ஆங்கிலப் படம் என்பதால்தான் ஸ்லம்டாக் மில்லியனர், 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு 8 விருதுகளைப் பெற்றுள்ளது. இல்லையென்றால், இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாகியிருக்காது.
ஆஸ்கரின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் இந்திய இயக்குநர் சத்யஜித்ரே. குறிப்பிட்ட படத்திற்காக அவருக்கு விருது வழங்க ஆஸ்கர் குழுவினர் தயாராக இல்லை. டேனி பேர்ல் வெள்ளைத்தோல்காரர் என்பதால் அவரைச் சார்ந்து பணியாற்றியதன் வாயிலாக இந்தியர்களின் ஆஸ்கர் கனவு நிறைவேறியுள்ளது. ஒலி சேர்ப்பிற்காக ரசூல் புக்குட்டியும், ரகுமான் இசையில் ஜெய் ஹோ பாடலை எழுதிய இந்திப் பாடலாசிரியர் குல்ஜாரும் ஆஸ்கர் விருது பெற்றுள்ளனர். உலகத்தரமிக்க கலைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதும், அவர்களை அங்கீகரிக்க வெள்ளைத் தோல்காரர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையுமே இந்த விருதுகள் நிரூபிக்கின்றன.
இத்தகைய இனரீதியான தடைகளை மீறி ஒருவர் விருது பெறும்போது, அந்த விருதுக்குப் பெருமை சேர்கிறது. அதிலும் இரண்டு விருதுகளை ஒரே நேரத்தில் ரகுமான் பெற்றிருப்பது இன ஒடுக்கல் மிகுந்த ஆஸ்கருக்குள் இந்தியர் நிகழ்த்தியிருக்கும் கின்னஸ் சாதனையாகும். இதனை கடுமையான உழைப்பும், தொடர்ச்சியான தேடலும், இடைவிடாத போராட்டமுமே சாத்தியமாக்கும்.
“இசையை அன்பின் வடிவமாக பார்க்கிறேன். அதனை மனித சமுதாயத்திற்கு செய்யும் சேவையாகக் கருதுகிறேன். மகிழ்ச்சியை சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனுபவமாகவே இசையைக் கையாள்கிறேன்” என்கிறார் ரகுமான். அதனால்தான் அவருக்கு கிடைத்த இரட்டை ஆஸ்கரை தங்களுக்கு கிடைத்ததாக நினைத்து மகிழ்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.
உலகத் திரை இசையின் உச்சத்தை தொட்டுவிட்டார் ரகுமான். கிளைகள் எங்கெங்கோ பரவினாலும் வேர் என்பது சொந்த மண்ணில்தான். மேற்கத்திய பாணி இசைக்காகத்தான் ரகுமான் இப்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறார். தமிழிசையில் ரகுமான் இதுவரை ஆழமாகச் செல்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த மண்ணின் இசை மரபுடனான ஓர் இசைத்தொகுப்பு அவரிடமிருந்து வெளிப்படவில்லை. பாரம்பரியமிக்க தமிழின் இசை மரபை நவீனப்படுத்தும் பணிக்குத் திரும்புவதற்கு ரகுமானுக்கு இனி நேரமும் வாய்ப்பும் இருக்குமா?
-கோவி.லெனின்

















23 பிப்ரவரி, 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருது


ஆஸ்கர் விருது வென்ற தங்க மகன் ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்திப் படப் பாடல்களுக்கு தலையாட்டி ரசித்து கொண்டிருந்த தமிழர்களை தமிழ்பாட்டு பக்கம் இழுத்து வந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா என்றால் அந்த இந்திக்காரர்களையே தமிழ்பாட்டுக்கு தலையாட்ட வைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவர் சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தாத்தா ராஜகோபால் பாகவதர் அந்தக்கால கதாகாலட்சேபம் நடத்தியவர். அவரது மகனான ஆர்.குணசேகர் என்கிற ஆர்.கே.சேகர் மலையாள திரையுலகின் மிகப்பெரிய இசை வல்லுநர். 22 படங்களுக்கு இசையமைத்தவர் அவரது வழிதோன்றல்தான் திலீப்குமார் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான். 1966 ஜனவரி 6ஆம் நாள் ஆர்.கே.சேகர் கஸ்தூரி தம்பதிகளின் மூத்த பிள்ளையாக பிறந்த திலீப் இன்று ஏ.ஆர்.ரஸ்மான் என்ற பெயரில் உலகப் பெற்றிருக்கிறார். 1977இல் கேன்சர் நோய்க்கு தந்தையே பறிக் கொடுத்தபோது அந்த இசை இளவலுக்கு வயது பதினொன்று.
தந்தையின் இழப்புக்கு பின் குடும்பத்தில் வறுமை புகுந்து கொள்ள குடும்பத்தின் ஒரே ஆண் மகனான அந்த சின்ன வயதிலே இசைக்குழுக்களில் சேர்ந்து உழைக்க ஆரம்பித்தார். ரஹ்மான் முதன்முதலாக வாசிக்கக் கற்றுக் கொண்டது பியானோ, தமது பதினொரு வயதில் கிடார் மற்றும் 'கீ போர்டு' இசைக்க கற்றுக்கொண்டார். இளம் வயதிலேயே ரஹ்மான் இசையின் ஆரம்ப கட்டப் பயிற்சியை தந்தையிடம் பெற்றிருக்கிறார். வீடெங்கும் இசைக்கருவிகள் இருந்த சூழல் வளர்ந்தார். நான்கு வயதான திலீப் (ரஹ்மான்) ஹார்மோனியத்தில் ஒரு பாடலை வாசிக்கக் கேட்ட சுதர்சனம் மாஸ்டர் அதன் கட்டைகளை ஒரு துணியால் மறைந்தாராம். குழந்தை தன்னம்பிக்கையுடன் அதே மெட்டை மறுபடியும் வாசித்துக் காண்பித்ததாம்.
மகனின் ஆபூர்வமான திறமையைக் கண்ட சேகர் அப்போது சொன்னாராம் ''என் வாழ் நாளெல்லாம் நான் இரண்டாம் இடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒரு நாள் நான் வெற்றிபெறுவேன் என்று! அவர் வாக்கு பலித்து விட்டது மகனின் வழியாக! தென்னிந்தியாவில் மட்டுமல்ல இந்திய அளவில் ஏன் உலக அளவில் வெற்றி பெற்றுவிட்டார் ரஹ்மான்.
தமது தந்தையுடன் பாடல் பதிவுக் கூடங்களுக்குக் சென்றது தான் ரஹ்மானின் இளமைப் பருவத்தின் பொக்கிஷமான முக்கிய நினைவுகள்:
''எனக்கு ஊக்கமூட்டும் நினைவாக இருப்பது என் தந்தையின் நினைவுதான். எங்கள் வீட்டு வரந்தாவில் அன்றைய புகழ்பெற்ற இயக்குநனர்கள் வந்து காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரே சமயத்தில் எட்டு ஒன்பது படங்களக்கு என் தந்தை உழைப்பார். ஒன்றுக்கு இசையமைப்பார் மற்றொன்றுக்கு இசை கோர்ப்பு செய்து கொடுப்பார். இன்னொரு புறம் இசை நடத்துவார். இப்படி நேரம் காலம் பாராமல் உழைத்து கொண்டே இருந்ததால் தான் அவர் உயில் துறந்தார் என்று நான் நினைக்கிறேன் என்கிறார் ரஹ்மான்.
1987 முதல் அவர் விளம்பர படங்களுக்கு இசையமைத்தார் சுமார் 300க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் சின்னத்திரை வழியாக அவரது இசை வலம் வந்தது. ரஹ்மானின் விளம்பர இசையை பார்த்துதான் மணிரத்னம் அவரை தமது படத்திற்கு இசையமைப்பாளராக நியமித்தார். 1992ஆம் சுதந்திர தினத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்பார் ரஹ்மான். காரணம் 'ரோஜா படம் வெளியாகி தென்னிந்தியா திரும்பி பார்த்த நாள் அதுதான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் ரஹ்மான். இந்திய இசைமைப்பாளர்களிலேயே அதிக தடவை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஹ்மான் தான்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், ராஜீவ்காந்தி விருது, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, பிரபல இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் நினைவாக வழங்கப்படும் ஆர்.டி.பர்மன் விருது. எம்.டி.வி.யின் வாழ்நாள் சாதனை விருது. 18 முறைகளுக்கு மேல் பி ம்ஃபேர் விருது என ரஹ்மானை பெருமைப்படுத்திய விருதுகளின் எண்ணிக்கை அதிகம். உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்டடது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரபல இயக்குனர் சத்ய ஜித்ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

15 பிப்ரவரி, 2009

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா

நான் கடவுள் - காவியும் காசியும் -ஹரன் பிரசன்னா'நான் கடவுள்' படம் தமிழ்த் திரையுலகம் இதுவரையில் காணாத காட்சிகளைக் காண்பிக்கிறது. கதையின் நிகழ்களமாக எடுத்துக்கொள்ளப்படும் பிச்சைக்காரர்களின் உலகம் இதுவரை யாரும் திரையில் காணாதது. அதற்காக பாலா மெனக்கெட்டிருக்கும் விதம் அசாத்தியமானது. ஒவ்வொரு பிச்சைக்காரரையும் தேர்வுசெய்து நடிக்க வைத்திருப்பதற்கே நிறைய நாள்கள் தேவைப்பட்டிருக்கும். ஏழாவது உலகம் நாவலை படித்திருக்காத பலருக்கு, இத்திரைப்படம் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும், பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. அதேபோல் தமிழ்த்திரையுலம் காணாத இன்னொரு விஷயம், சன்யாசிகளின் வாழ்க்கை. ஹிந்துமதம் தொடர்பான எந்த ஒரு காட்சியையும் விமர்சனத்தோடும், கேலியோடும், கிண்டலோடும் மட்டுமே எடுக்கும் தைரியம் கொண்ட கமல்ஹாசன், பாலசந்தர் வகையறாக்களுக்கு மத்தியில், இந்து மதச் சார்பான குரல்கள் - அது நியாயமான ஒன்றாக இருந்தாலும் கூட - எங்கேயும் வெளிவந்துவிடக்கூடாது என்ற கருத்தியல்கள் கொண்ட சிற்றிதழ்ச் சூழலில், உள்ளதை உள்ளபடி, அதுவும் அதை ஒரு மாபெரும் மக்கள் ஊடகத்தில் காண்பிக்கும் தைரியம் பாலாவிற்கு இருந்திருக்கிறது. படம் முழுக்க காவி நிறம். இந்த ஒரு காரணத்தினாலும், அகோரி தொடர்ந்து சமிஸ்கிருத வசனங்கள் பேசியபடியே வருவதானாலும் இது ஹிந்துத்துவ படம் என்கிற கருத்து ஒலிக்கிறது. ஆனால் உண்மையில் இத்திரைப்படம் இறை நம்பிக்கைக் கொண்டவர்களின் கருத்தைவிட அதிகமாக, இறையால் கைவிடப்பட்டதாகக் கருதிக்கொள்ளும் விளிம்பு நிலை மக்களின் எதிர்க்குரலைப் பதிவு செய்துள்ளதாகவே நான் காண்கிறேன். இதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், எந்த ஒரு மதத்தின் மீதும் கரிசனம் காட்டப்படவில்லை என்பதே. இஸ்லாம், கிறித்துவம் என்று வரும்போது கருணை பொங்கும் பகுத்தறிவும், ஹிந்துமதம் என்று வரும்போது அறிவுபூர்வமான பகுத்தறிவும் கொள்ளும் கலைஞர்களுக்கு இத்திரைப்படத்தை சமர்ப்பிக்கலாம்.பிதாமகன் திரைப்படம் வந்தபோது, பாலாவிற்கு மனப்பிறழ்ச்சி என்கிற வகையிலெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. (இத்தகைய திரைப்படங்கள் வருவதற்கு ஒரு இயக்குநரின் மனப்பிறழ்ச்சிதான் காரணம் என்றால், அந்த மனப்பிறழ்ச்சி நிறைய இயக்குநர்களுக்கு வரட்டும்.) அதே விமர்சனங்கள் இத்திரைப்படத்திலும் தொடரக்கூடும். பாலாவின் கதாநாயகர்கள் அசாதரணர்களாகவே வருவது, இவ்விமர்சனத்தின் பின்னாலிருக்கும் முக்கியமான காரணம். பிதாமகனில் விக்ரமின் பாத்திரம் ஏன் அப்படி அசாதரணனாக இருக்கவேண்டும் என்பதற்கு எவ்விதக் காரணமும் சரியாகச் சொல்லப்படவில்லை. இப்படத்திலும் அதுவே தொடர்கிறது. ருத்ரன் அகோரியாக வாழ்கிறான். அவனை யாரும் நெருங்கமுடியாது. அவன் யாரையும் அடித்து வீழ்த்தி வெற்றிகொண்டு விடுவான். இவற்றையெல்லாம் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அதன் பின்னர்தான் நம்மால் இப்படத்தைப் பார்க்கவே முடியும். தனது முந்தைய படங்களின் வழியே, பாலா இதற்கு நம்மைப் பழக்கிவிட்டார் என்பதால் இதனை அப்படி ஏற்றுக்கொண்டுவிட முடிகிறது. ஆனால், இதே போன்ற பாத்திரங்களின் வழியே தொடர்ந்து படமெடுப்பதைப் பற்றி பாலா யோசிக்கத் தொடங்கவேண்டும். மிக வித்தியாசமான ஒரு திரைப்படம், மசாலா திரைப்படம்தான் என்கிற வட்டத்துக்குள் சிக்குவது இது போன்ற சித்திரிப்புகளாலேயே.பிதாமகனில் செய்த இன்னொரு தவறை பாலா மீண்டும் செய்திருக்கிறார். காவல்நிலையத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள், படத்திற்குத் தேவையில்லாதவை மட்டுமல்ல. ஒருவித தவம் போலச் செல்லும் படத்தின் அமைதியை வெகுவாகக் குலைக்கின்றன.இத்திரைப்படத்தில் பாலாவின் வெற்றி, விளிம்பு நிலை மனிதர்களை அவர் காட்சிப்படுத்தியிருப்பதில் இருகிறது. ஒருவகையில் இது ஜெயமோகனின் வெற்றி. பிச்சைக்காரர்கள் சதா அழுதுகொண்டே இருப்பதில்லை. அவர்களின் உலகம் கேலி, கிண்டல், காதல் உள்ளிட்ட எல்லாவற்றினாலும் ஆனது. பிச்சையெடுக்கும் சிறுவன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. மிகக் கடுமையான திரைக்கதையை வசனத்தின் மூலம் சமனாக்கியிறார் பாலா. ஜெயமோகனின் நக்கல் வசனங்கள் திரைப்படம் முழுவதும் வியாபித்துக் கிடக்கின்றன. இவையே படம் பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றச் செய்கின்றன. இல்லையென்றால் இத்திரைப்படம் திரைப்பட விழாவிற்கு மட்டுமான திரைப்படமாகியிருக்கும்.ருத்ரனாக நடித்திருக்கும் ஆர்யாவிற்கு வேலை அதிகமில்லை. புஜங்களைத் தூக்கியபடி, முடியில் முகத்தை மறைத்துக்கொண்டு, சதா கஞ்சா போதையில் கண்களைச் சுழலபட்டி நடக்கவேண்டும். அவரது வேலையை மிக நன்றாகவே செய்திருக்கிறார். இவ்வேடத்தில் அஜித்தை நினைத்துப் பார்க்கும்போதே குலை நடுங்கியது. பாலாவிற்கு என்னதான் தன்னம்பிக்கை அதிகம் என்றாலும், அஜித்தை முதலில் ஒப்பந்தம் செய்ததெல்லாம் கொஞ்சம் ஓவர். பூஜாவின் நடிப்பு அசத்தல். ஒரு தேசிய விருதுக்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார். பூஜாவின் உழைப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கவேண்டும்.திருநங்கைகள் தொடர்ந்து தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்டு வரும் விதம் குறித்து குமுறியவர்களுக்கு இதம் தரும் வகையில், இத்திரைப்படத்தில் திருநங்கையின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. திருநங்கையாக வருபவர், மற்ற எந்தக் கதாபாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார். தமிழில் இது ஒரு சாதனை. அவர்கள் மேல் தேவையற்ற காட்சிரீதியிலான கிண்டல்கள் வைக்கப்படவில்லை. திருநங்கைகளைப் பொதுமைப்படுத்திச் சித்திரிக்கும் அவலம் எல்லாம் இல்லாமல், அப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் பாலாவைப் பாராட்டவேண்டும். அதோடு, இதுபோன்ற திரைப்படங்களில் வரும் கதாநாயகி ஒரு பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்படுவார். அது அவரது எஜமானாலேயோ அல்லது ஒரு பொதுஜனத்தாலேயோ அல்லது இருவருமாலேயோ நிகழும். இது போன்ற க்ளிஷே காட்சிகள் இப்படத்தில அறவே தவிர்க்கப்பட்டிருப்பது இன்னொரு முக்கிய விஷயம். அதன் காரணம், பாலா பூஜாவை ஒரு நடிகையாகப் பார்க்காமல், ஒரு பிச்சைக்காரப் பெண்ணாக மட்டும் பார்த்திருப்பதுதான் எனலாம். பெரும்பாலான தமிழ்ப்படங்களில் இது நிகழ்வதே இல்லை என்பதே இத்தகைய அபத்தக் காட்சிகள் இடம்பெறுவதற்கான காரணம்.ருத்ரனின் அம்மாவாக நடிக்கும் பெண்மணிக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம். ஒரு சிக்கலான மனநிலையைச் சொல்லவேண்டிய அவருக்கு அழமட்டுமே தெரிகிறது. இதுபோன்ற காட்சிகளில் ஒரு புதுமுகத்தை நடிக்க வைப்பதே நல்லது. கவிஞர் விக்கிரமாதித்யன் ஆச்சரியமான சந்தோஷம்.எல்லாவற்றையும்விட முக்கியமானது படத்தின் இசை. இத்திரைப்படத்தின் உண்மையான ஹீரோ இளையராஜாதான். குணா, மகாநதி, ஹே ராம், விருமாண்டிக்கு அடுத்து வந்திருக்கும் மிகச்சிறந்த இசைக்கோவை உள்ள திரைப்படம் இதுவே. நெஞ்சை அதிர வைக்கும் இசை, மனதை உருக வைக்கும் இசை, காட்சியின் வீர்யத்தை அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் இசை என இளையராஜா மாறாத உருவங்களில்லை. இசையில் நெருப்பு எரிகிறது. நதி ஓடுகிறது. சங்கு ஒலி சங்கை அறுக்கிறது. ஹே ராம் திரைப்படத்திற்கே இளையராஜாவிற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இத்திரைப்படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்றுதான் நினைக்கிறேன். பாடல்களைப் பொருத்தவரை, ஓம் சிவோகம் பாடல் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மற்ற பாடல்கள் எல்லாமே சுமார் ரகம். மது பாலகிருஷ்ணனின் மயக்கும் குரலில் ஒரு பாடல் வருகிறது. ஆனால் அது மனதில் தங்கவே இல்லை.ஒளிப்பதிவு வெகு அழகு. காசி நகரக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் காமராவின் வேகம் அசர வைக்கிறது.பெரும்பாலும் வித்தியாசம் மற்றும் பிரம்மாண்டம் ஒருங்கே இணைந்த தமிழ்த் திரைப்படங்களை (ஹே ராம், குருதிப்புனல், மகாநதி, குணா போன்றவை) கமல்ஹாசனே தந்திருக்கிறார். அதை இம்முறை பாலா தந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருமாண்டிக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படம் இல்லாத நிலையில், நான் கடவுள் அக்குறையைத் தீர்க்கிறது. கமல் செய்யும் நுண்ணரசியல் எதுவும் இல்லாமல், பின்னோக்கங்கள் எதுவும் இல்லாத தெளிவான படமாகவும் 'நான் கடவுள்' இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. ஹே ராம் போல, இது தமிழ்த் திரையுலகின் மைல்கல்லா என்றால் கிடையாது. ஆனால் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் இது ஒன்று. நந்தாவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சேது, பிதாமகன், நான் கடவுள் என பாலாவின் கிராஃப் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. இத்திரைப்படம் இதுவரை வந்திருக்கும் பாலாவின் படங்களில் சிறந்த படம். வரும் படங்களில், இன்னும் அதிக உயரத்தை பாலா தொடுவார் என உறுதியாக நம்பலாம்.இட்லிவடைக்கு ஸ்பெஷலாக எழுதி கொடுத்த ஹரன் பிரசன்னாவிற்கு நன்றி

அண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள்.

அண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள்.










12 பிப்ரவரி, 2009

திரைஉலக வரலாற்றில் 'நான் கடவுள்'... - ரஜினி கடிதம்