நீண்ட நாளுக்குப் பின் தோட்டம்
மீண்டும் கனவில் வந்தது
தானாகவே முளைத்திருந்த
பப்பாளி மரங்களின் கிளைகளில்
வெள்ளை வெள்ளையாகக் காய்ந்து கிடந்தது
காகத்தின் எச்சம்
சிறுவர்கள் எறிந்த பந்து
கண்டெடுக்கப்படாமல் அலைந்து
நிலைத்திருக்கவேண்டும், அதன்
உடலெங்கும் மண்ணாக
கரிய சுவரில்
நிழலில்லா கரும்பூனை
தோட்டத்தைப் பார்த்தபடி நடக்க
மண்வாசனையுடன் லேசான தூரலென
திசை மறக்கத் தொடங்கினேன்
கனவு கலையும் நேரம்
கை பிரிந்து செல்லும்
காற்றைப் பற்றிக் கவலையில்லை
எங்கேனும் சுற்றித் திரிந்து
மீண்டு ஏகும்
எனக்கான கனவைப் போல
எனக்கான காற்றும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக