மு.இளங்கோவன்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்றவருமான முனைவர் ச.அகத்தியலிங்கம் (79) புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற கார் விபத்தில் நேற்று (4ம் தேதி) இறந்தார். அவர் துணைவியார் பொன்னம்மாளும் (78), ஓட்டுநர் சீவபாலனும் (28) ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு இறந்தனர்.
முனைவர் ச.அகத்தியலிங்கனாரின் வாழ்க்கைக் குறிப்பு:
ச.அகத்தியலிங்கனார் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் 1929 ஆகஸ்ட் மாதம் 19ம் நாள் பிறந்தவர். பெற்றோர் சண்முகம் பிள்ளை-அருணாசல வடிவு. நாகர்கோயில் இந்து கல்லூரியில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர். இங்குப் பயிலும்பொழுது குமரி அனந்தன் அவர்கள் இவருக்கு நெருங்கிய நண்பரானார்.கேரளா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் அவர்களின் மேற்பார்வையில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார்.அமெரிக்காவில் இவர் முனைவர் பட்டம் பெற்றபொழுது உலகின் மிகச்சிறந்த மொழியியல் அறிஞர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார்.மொழியியல் துறையில் தமிழ் மொழியின் சிறப்பு அறியப்படாமல் இருந்தது. இம் மேல்நாட்டுச் சிந்தனை மரபை உடைத்துத் தமிழுக்கு உலக அளவில் புகழ் கிடைக்கவும் உலக மொழியியல் அறிஞர்கள் தமிழின் பக்கம் கவனத்தைத் திருப்பவும் அகத்தியலிங்கனாரின் பணி குறிப்பிடும்படியாக இருந்தது.அயல்நாட்டு மாணவர்கள் தமிழ் கற்கவும் தமிழ்மொழியின் அமைப்பை ஆராயவுமான சூழலை உருவாக்கியவர்.அமெரிக்காவில் பணிபுரிந்த பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் தமிழின் சிறப்புப் பற்றிய நூல்கள் எழுதக் காரணமாக இருந்தவர். அறிஞர் கார்ட்டு, பாண்டே, தாமஸ் டிரவுட்மண்டு உள்ளிட்டவர்களுக்கு நெருக்கமாக இருந்து தமிழ் பயிற்றுவித்தவர். அவர்களால் மதிக்கப் பெற்றவர். தமிழ்த்துறை, ஆங்கிலத்துறை, மொழியியல்துறை சார்ந்த பேராசிரியர்கள் பலருக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்தி முனைவர் பட்டம் பெறக் காரணமாக இருந்தவர்.தமிழ்நாட்டில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் பலரும் ச.அகத்தியலிங்கனாரின் மாணவர்களாக விளங்கியவர்களே.பொற்கோ, கி.அரங்கன், கருணாகரன் செ.வை.சண்முகம் க.இராமசாமி உள்ளிட்ட அறிஞர்கள் மொழியியல் துறையில் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்த நம் அகத்தியலிங்கனார் காரணமாக அமைந்தார்கள். இவரிடம் மொழியியல் கற்றவர்கள் உலக அளவில் உள்ளனர். இவர் தமிழ் ஆங்கிலம் மலையாளம் மொழிகளில் நல்ல புலமைபெற்றவர்.அகத்தியலிங்னார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் டெல்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.1968 முதல்1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.தமிழ்த்துறையில் புல முதன்மையராகவும் பணிபுரிந்தவர். சிகாகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகை தரு பேராசிரிராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த மெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன.இவர்தம் தமிழ்,ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.அகத்தியலிங்கனார் இதுவரை 55 முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்கு உரியவர். இவரின் மொழியியல் பணிகள் ஆய்வுகள் நூல்கள் இவருக்கு உயரிய விருதுகள் பட்டங்கள் பதவிகள் கிடைக்க காரணமாயின. அவ்வகையில் இவர் தமிழக அரசின் திரு.வி.க.விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.உலக நாடுகள் பலவற்றிற்கு இவர் பயணம் செய்து தமிழின் பெருமை பற்றி பேசிய பெருமைக்கு உரியவர். பல பல்கலைக்கழகங்களில் கல்விக்குழு அறிவுரைஞர் குழு எனப் பலவற்றறில் இணைந்து பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பணி ஓய்வு பெற்ற பிறகும் தம் இலத்தில் அமர்ந்தபடியே பல்வேறு ஆய்வுகளைச் செய்துவந்தார். உலக நாடுகள் இவரை அழைத்துப்பெருமை கொண்டன. அவ்வகையில் அண்மையில் சிங்கப்பூர் சென்று ஆய்வரங்கில் கலந்துகொண்டு உரையாற்றி மீண்டுள்ளார். எதிர்பாராமல் நடந்த சாலை விபத்தில் இயற்கை எய்திய ச.அகத்தியலிங்கனாரின் பிரிவு அறிந்து தமிழ் அறிஞர் உலகமும் மொழியியல் துறையினரும் கலங்கி நிற்கின்றனர்.மறைந்த துணைவேந்தரின் மகள் சண்முகசுந்தரி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிக் கல்விப் பிரிவில் திருச்சிஅலுவலகத்தில் பணிபுரிகிறார். இன்னொரு மகள் அருணாசலவடிவு சென்னைப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராப் பணிபுரிகிறார்.முதல்வர் இரங்கல்:அகத்திலிங்கத்தின் மறைவுக்கு முதல்வர் கருணநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.சில நாட்களுக்கு முன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன்னுடன் அவர் பங்கேற்றத்தை நினைவுகூர்ந்துள்ள கருணாநிதி, தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகள மகத்தானவை. அவரது மறைவு தமிழுலகுக்கு பெரும் இழப்பு என்று கூறியுள்ளார்.அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.-மு.இளங்கோவன் (muelangovan@gmail.com)
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.
-
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளியின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க விரும்பும்
அன்பர்கள் இணைக்கப்பட்டுள்ள தொடுப்பைச் சுட்டி, கல்வி அமைச்சருக்கு அனுப்ப
வேண்டிய க...
10 ஆண்டுகள் முன்பு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக